Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 மே (ஹி.ச.)
சேலத்தில் மதுபோதையில் சக மாணவனை படுகொலை செய்து சிறுவர்கள் காணொலியில் படம் பிடித்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது
போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர்
ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை
செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவன் கோகுலை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து
மது அருந்திக் கொண்டிருந்த போது, சாதியின் பெயரை சொல்லி திட்டியதால்
அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற
மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி,
கொலை செய்யும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்து கொண்டாடியுள்ளனர். இதைப்
பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளனர்.
மது மனிதர்களை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக்
காட்டு இது தான் . தங்களுடன் ஒன்றாக பழகிய நண்பனை கொலை செய்தது மட்டுமின்றி,
அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனை கொடூரனாக
மாற்றியிருக்கிறது. மதுவை விட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மனிதர்களை
மேலும் மோசமாக்குகின்றன.
தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்
என்பதைத் தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
தமிழ்நாட்டில் மது மற்றும்
போதையின் சீரழிவுகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்து விட்டன. நிலைமை மேலும்
மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க
போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam