Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மே (ஹி.ச.)
பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்டுவதற்கு வழிவகுக்கும் வகையில்தான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவையில் இந்தச் சட்டங்களை கொண்டு வர முயன்றபோதே பா.ஜ.க. அரசை கடுமையாக எதிர்த்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் துளியும் மதிக்காத மோடி அரசு, இந்தச் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக இயற்றியது. தற்போது அவற்றுக்கான விதிகளை அறிவித்து அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான சலுகைகளுக்கு எதிரான தாக்குதலாகவே இந்த நடவடிக்கையை பார்க்கிறேன் என்றும், ஒன்றிய அரசுக்கு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்தவே “வி.பி. ராம் ஜி சட்டம்” உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கிருந்த கடைசி பொருளாதார பாதுகாப்பையும் பறிக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எளிய மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் உழைப்பைச் சுரண்டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ