Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 மே (ஹி.ச)
தூத்துக்குடி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய அம்மாவட்டத்தின் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டடது.
இந்தப் பேருந்து நிலையத்தில், பயணிகள் காத்திருக்கும் இடம், பேருந்துகள் வந்து செல்லும் பகுதி என அனைத்து இடங்களையும் உள்ளடக்கி மொத்தம் 37 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு மூலையையும் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், விழிப்புணர்வு தகவல்களைத் தெரிவிக்கவும் பேருந்து நிலையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் 8 உயர்திறன் கொண்ட ஹாரன் ஸ்பீக்கர்கள் நிறுவப்பட்டுள்ளன.
குறிப்பாக, பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஷேர் ஆட்டோ நிறுத்தம் முதல் கண்ணா சில்க்ஸ் வரை இந்த ஒலிபெருக்கி வசதி விரிவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் தூத்துக்குடியின் ஒருங்கிணைந்த நவீன சிசிடிவி காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே போலீசார் பேருந்து நிலையத்தைக் கண்காணிப்பதோடு, ஒலிபெருக்கி வழியாகப் பயணிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை உடனுக்குடன் வழங்க முடியும்.
இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் இன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைத்தலைவர் அசோக் குமார், மற்றும் அதிகாரிகள், இந்தத் திட்டத்திற்கு உதவிய சிக்னல் கோர் சொல்யூசன்ஸ் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b