ருத்ரபிரயாகில் சார் தாம் யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் – உத்தரகாண்ட் காவல்துறை ஏற்பாடு
ருத்ரபிரயாக், 11 மே (ஹி.ச.) இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக யாத்திரைகளில் ஒன்றான சார் தாம் யாத்திரை, ஏப்ரல் 19 அன்று பல்வேறு ஆலயங்களில் சடங்குகளுடன் முறைப்படி தொடங்கியது. கேதார்நாத் கோயிலுக்கான வருடாந்திர யாத்திரை, அதன் குளிர்கால இருப்பிடமான ஓம
ருத்ரபிரயாகில் சார் தாம் யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்  – உத்தரகாண்ட் காவல்துறை ஏற்பாடு


ருத்ரபிரயாக், 11 மே (ஹி.ச.)

இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக யாத்திரைகளில் ஒன்றான சார் தாம் யாத்திரை, ஏப்ரல் 19 அன்று பல்வேறு ஆலயங்களில் சடங்குகளுடன் முறைப்படி தொடங்கியது.

கேதார்நாத் கோயிலுக்கான வருடாந்திர யாத்திரை, அதன் குளிர்கால இருப்பிடமான ஓம்காரேஸ்வர் கோயிலில் இருந்து கேதார்நாத் பெருமானின் பஞ்சமுக பல்லக்கு சம்பிரதாயபூர்வமாக புறப்பட்டதுடன் தொடங்கியது.

கேதார்நாத் கோயிலுக்கு வருகை தரும் பெருந்திரளான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ருத்ரபிரயாக் பகுதியில் உத்தரகாண்ட் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கோயில் வளாகம் வரை செல்லும் சார் தாம் யாத்திரை வழித்தடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோயிலைச் சுற்றியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து சதிச்செயல் தடுப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயில் நுழைவுப் பகுதிகள், ஓய்வு மண்டபங்கள் மற்றும் பக்தர்களின் உடைமைகளை முழுமையாக சோதனை செய்ய நவீன உலோகக் கண்டுபிடிப்பு கருவிகள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், கூட்டம் அதிகமுள்ள இடங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றி, கேதார்நாத் யாத்திரையை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகாசி மற்றும் தெஹ்ரி கார்வால் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களை கவனத்துடன் திட்டமிடுமாறு கார்வால் ஆணையர் வினய் சங்கர் பாண்டே அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து கார்வால் ஆணையர் கூறுகையில்,

மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வானிலை மிகவும் பாதிப்புக்குரியதாக இருக்கும் என்பதால், பயணத்தின் போது கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக வானிலை சீராகும் வரை காத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பான யாத்திரைக்காக நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சார் தாம் யாத்திரையை சீராகவும், பாதுகாப்பாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் நடத்த மாநில அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. இதற்காக அனைத்து தொடர்புடைய துறைகளுக்கும் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வுடன் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்.

இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தெஹ்ரி கார்வால் மற்றும் உத்தரகாசி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை ஆய்வு மையத்தின் ஆரஞ்சு எச்சரிக்கையில், சில பகுதிகளில் கனமழை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b