Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மே (ஹி.ச.)
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையின் படி, இந்த சிறப்பு அதிரடிப்படைக்கு ஐ.ஜி. அதிகாரி தலைமையேற்க உள்ளார். அவருடன் ஒரு எஸ்.பி., இரண்டு டிஎஸ்பிகள் மற்றும் நான்கு ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள். மேலும் தேவைக்கேற்ப கூடுதல் காவல் பணியாளர்களும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த படையின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து கண்காணிக்கும் பணியில் இந்த அதிரடிப்படை ஈடுபடும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதன்படி பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், செயின் பறிப்பு, தொந்தரவு சம்பவங்கள் மற்றும் இரவு நேர பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை தடுக்கும் வகையில் இந்த படை செயல்படும் என கூறப்படுகிறது.
மேலும் நவீன தொழில்நுட்ப வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், ரோந்து வாகனங்கள் மற்றும் விரைவு நடவடிக்கை முறைகள் மூலம் இந்த சிறப்பு அதிரடிப்படை இயங்கும் என்றும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P