Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மே (ஹி.ச.)
சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரவு நேரத்தில் மது போதையில் இருந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரை தாக்கிக் கொலை செய்து, அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து மகிழ்ந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதாக “1.0”, “2.0” என பெயர்கள் சூட்டப்பட்டாலும், அவற்றை கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து, அதனுடன் தொடர்புடைய குற்றச்சம்பவங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
எனவே, தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக தடுப்புப் படையின் பணிகளை விரைவுபடுத்தி, போதைப்பொருட்களின் நடமாட்டத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ