Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 12 மே (ஹி.ச.)
கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு பானுப்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டு மகன்கள் உள்ளனர்.
மகேஷ்குமார் பணியினால் வெளியூரில் இருந்ததால், பானுப்பிரியா தனது மாமனார் செல்லப்பன், மாமியார் காளியம்மாள் மற்றும் குழந்தைகளுடன் பாலகுறியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் என்பவருடன் பானுப்பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்த மகேஷ்குமார் விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது, மனைவியின் செல்போனை சோதனை செய்து பார்த்ததில் பூவரசனுடன் இருந்த தொடர்பு குறித்து அறிந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த பூவரசன், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மகேஷ்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, மகேஷ்குமாரை கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த மகேஷ்குமாரின் தந்தை செல்லப்பனையும் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் இருவரது உடல்களையும் பெட்ஷீட்டில் கட்டி, அருகிலுள்ள கொடுகூர் மற்றும் வெப்பாலம்பட்டி பகுதிகளுக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பானுப்பிரியா மற்றும் பூவரசன் சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்ததைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam