Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த வழக்கை, தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்திருந்தார். திருப்பத்தூர் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முடிவு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைத்து அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இந்த மனுவில், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் அமர்வில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
இரு தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் ஈர்த்துள்ள இந்த வழக்கின் தீர்ப்புக்கு அரசியல் கட்சியினர் மற்றும் திருப்பத்தூர் தொகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ