Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச)
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், தேர்தல் விதிமீறல்கள் இருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து இன்று உத்தரவிட்டது.
மேலும், திருப்பத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்கள், படிவங்கள் மற்றும் பதிவேடுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முக்கியமான சூழலில் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது பேரவையின் எண்ணிக்கை பலத்தை பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் மேல்முறையீடு செய்யும் எனத் தெரிகிறது. வழக்கின் அடுத்த விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, வெற்றி பெற்ற வேட்பாளரின் உரிமைகளை கட்டுப்படுத்தும் இதுபோன்ற இடைக்கால உத்தரவுகள் முன்னுதாரணமாக அமையும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b