Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச)
ஆண்டுதோறும் மே 12-ம் தேதி, நவீன செவிலிய முறையின் முன்னோடி ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளில் சர்வதேச செவிலியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
புனிதமான மருத்துவச் சேவையில் தங்களை அர்ப்பணித்து, இரவு பகல் பாராது நோயாளிகளின் நலனுக்காக உழைத்து வரும் செவிலியர் பெருமக்கள் அனைவருக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
சாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான தூய அன்புடனும், கருணையுடனும் நோயுற்றோரைக் கவனித்து வரும் அரும்பணி செவிலியர் பணி. இது வெறும் தொழில் அல்ல; மனிதநேயத்தின் உயிரோட்டமான வடிவம்.
கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தைப் பிரிந்து, மருத்துவமனைகளில் களப்பணியாற்றிய செவிலியர்களின் தியாகம் என்றும் போற்றுதற்குரியது. வலியில் துடிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவர்களாகவும் செவிலியர்கள் திகழ்கின்றனர்.
இத்தகைய புனிதமான சேவையில் ஈடுபட்டு வரும் செவிலிய சகோதர, சகோதரிகளின் பணி நலன் காக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகளும், மரியாதையும் சமூகத்தில் முழுமையாக கிடைக்க வேண்டும். செவிலியர் தினமான இன்று, அவர்களின் சேவையை நன்றியுடன் நினைவுகூர்ந்து, எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b