Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 மே (ஹி.ச.)
தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.317 கோடி தொகையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத் தர தேவையான அனைத்து உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாநிலத்தின் பல்வேறு விவசாய பிரச்சினைகள் மற்றும் நீர்வளத் தேவைகள் குறித்தும் அவர்கள் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பின் சார்பில் நிலுவையில் உள்ள ரூ.317 கோடி தொகை விவசாயிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தத் தொகையை ஒன்றிய அரசிடம் பேசி விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், விவசாயிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஒன்றிய அரசுத் துறைகளுடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு வாரங்களுக்குள் நிலுவைத் தொகையை பெற்றுத் தர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் இந்த விரைவு நடவடிக்கைக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ