Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேறியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு அரசியல் சமரசமற்ற சமத்துவப் போராட்டத்திற்கு பெயர்போனது. ஒவ்வொரு காலத்திலும் தமிழக மக்கள் தங்களுக்கான மக்களாட்சியை சாமானியர்களின் கைகளில் ஒப்படைப்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வென்றெடுத்தது சாமானிய மக்களின் புரட்சி. 1977-ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வென்றதும் மற்றொரு சரித்திரப் புரட்சி. அதுபோன்ற வரலாற்றுப் பொறுப்பை அரை நூற்றாண்டுக்கு பிறகு, தங்கள் வீட்டுப் பிள்ளையான கழகத் தலைவர் மற்றும் அவர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திடம் தமிழக மக்கள் ஒப்படைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக தேர்வான நாம், இன்று அனைத்து மதச்சார்பற்ற தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பேரவை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், “மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில் உறுதியாக இருந்து மக்களுக்காக பணி செய்ய வந்திருக்கும் நம்மை வாழ்த்தி ஆதரவளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான ஆட்சி தமிழ் நிலத்தின் உரிமையையும், அனைத்து மக்களுக்குமான நலனையும் மீட்டெடுக்கும். பெருந்தலைவர்கள் காட்டிய கொள்கைப் பாதையில் எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும்.
இந்த காலத்தின் பொறுப்பில் அனைவரும் கைகோர்த்து பயணிப்போம். புது வரலாறு படைப்போம் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ