Enter your Email Address to subscribe to our newsletters

ஈராக், 13 மே (ஹி.ச.)
வியட்நாமின் அரசு எண்ணெய் நிறுவனம், பாரசீக வளைகுடாவில் அமலில் உள்ள கடல் முற்றுகையைக் கடந்து செல்ல 'அஜியோஸ் ஃபானூரியோஸ் I' என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பலுக்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்காவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தக் கப்பலின் சரக்கு மிக முக்கியமானது என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஈஸ்டர்ன் மெடிட்டரேனியன் மேரிடைம் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த சூப்பர் டேங்கர், முற்றுகைப் பகுதியை நெருங்கிய பின் திருப்பி அனுப்பப்பட்டது.
ஈராக்கின் பஸ்ரா பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட 19.9 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இக்கப்பல் கொண்டு செல்கிறது.
தேசிய எரிசக்தி நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான பெட்ரோவியட்நாம் ஆயில் கார்ப், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவிடம் இந்தச் சரக்கு தங்களுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தியுள்ளது.
ஈராக்கில் ஏற்றப்பட்ட இந்தக் கப்பலின் இலக்கு, வியட்நாமின் செயல்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று அமைந்துள்ள நிகி சான் ஆகும்.
இந்த ஏற்றுமதி நிகி சான் சுத்திகரிப்பு ஆலைக்கு இன்றியமையாதது என்றும், மேலும் தாமதம் ஏற்பட்டால் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, வியட்நாமில் உள்ள கோடிக்கணக்கான நுகர்வோர், வணிகங்கள் மற்றும் பொதுச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முற்றுகையை மீறாமல் இருக்க கப்பல் திருப்பிவிடப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார், ஆனால் கூடுதல் விவரங்கள் வழங்கப்படவில்லை.
வியட்நாமில் செயல்படும் இரண்டு சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான நிகி சான், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாளொன்றுக்கு 2 லட்சம் பீப்பாய்கள் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, தற்போதைய ஏற்றுமதியுடன் சுமார் பத்து நாட்களுக்கு இயங்க முடியும்.
Hindusthan Samachar / vidya.b