Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 மே (ஹி.ச.)
ஜோதிடத்தையும் ஜோதிடர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு எதிராக தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தின் நிறுவனர் தலைவர் பிரசன்ன மணிகண்டன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது அரசியல் பிரிவு அலுவலராக ரிக்கி ராதன் வெற்றிவேல் பண்டிட் அவர்களை நியமித்திருப்பது, அவரின் திறமை மற்றும் நீண்டநாள் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பொறுப்பான முடிவு எனக் கூறினார்.
ஆனால், அவர் ஒரு ஜோதிடர் என்பதைக் காரணமாகக் கொண்டு, இந்த நியமனம் “அறிவியல் விதிகளுக்கு எதிரானது” என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் வன்னியரசும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜோதிடம் என்பது அறிவியலுக்கு முற்றிலும் முரணானது அல்ல; தமிழகத்தில் பல லட்சம் ஜோதிடர்கள் மக்களின் அன்றாட வாழ்வில் நம்பிக்கையூட்டும் வழிகாட்டிகளாக உள்ளனர்.
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும் வாழ்வியலாகவும் இருக்கும் ஒரு கலையை இழிவுபடுத்துவது, ஜோதிடச் சமூகத்தையே அவமதிப்பதாகும் என அவர் கூறினார்.
அரசியல் காரணங்களுக்காக, பிறர் மனநிலைகளையும் மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசுவது அரசியல் நாகரீகத்திற்கு ஒவ்வாதது. எனவே, வன்னியரசு தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதோடு, பொதுமக்கள் முன் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இல்லையெனில், தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தின் நிர்வாகக் குழு விரைவில் கூடி, அவருக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கும் என எச்சரித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN