கியூபாவில் எரிசக்தி நெருக்கடி - ஹவானாவில் சுழற்சி முறை மின்வெட்டு அமல்
ஹவானா, 14 மே (ஹி.ச) டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் இருப்புகள் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாக கியூபா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அந்நாடு கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர்
கியூபாவில்  எரிசக்தி நெருக்கடி - ஹவானாவில் சுழற்சி முறை மின்வெட்டு அமல்


ஹவானா, 14 மே (ஹி.ச)

டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் இருப்புகள் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாக கியூபா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் அந்நாடு கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர் ஹவானாவில் சுழற்சி முறை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

வீடுகளில் சமையல் எரிவாயு இல்லை, குளிர்சாதனப் பெட்டிகள் இயங்காததால் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. மருத்துவமனைகள் ஜெனரேட்டர்களை நம்பி இயங்குகின்றன, ஆனால் அவற்றுக்கும் டீசல் பற்றாக்குறை நிலவுகிறது.

பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பகுதிநேரமாகவே செயல்படுகின்றன. பொதுப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் மின் உற்பத்தியில் 95% அனல் மின் நிலையங்களைச் சார்ந்துள்ளது. இவை முழுக்க முழுக்க டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய்யில் இயங்குபவை.

இருப்பு தீர்ந்ததால், நாட்டின் 8 முக்கிய அனல் மின் நிலையங்களில் 6 நிலையங்கள் ஏற்கனவே செயலிழந்துவிட்டன. ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு கூட நாடு முழுவதும் முழு இருளை ஏற்படுத்தக்கூடும்.

இந்த நெருக்கடிக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே முக்கிய காரணம் என கியூபா அரசு குற்றம்சாட்டுகிறது.

வெனிசுலா, ரஷ்யா போன்ற நட்பு நாடுகளிடமிருந்து வந்த எரிபொருள் விநியோகமும் சமீப மாதங்களில் குறைந்துவிட்டது. இதனால் உடனடி நிவாரணத்திற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் மின்வெட்டால் ஹவானா மற்றும் பிற நகரங்களில் அவ்வப்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கின்றன.

அரசு தரப்பில், மின்சாரத்தை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். அத்தியாவசியமற்ற மின் சாதனங்களை அணைத்து வையுங்கள் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத் திட்டங்களை விரைவுபடுத்துவதாகவும், நட்பு நாடுகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அரசு உறுதியளித்துள்ளது.

ஒரு காலத்தில் கல்வி, மருத்துவத்தில் முன்னோடியாக திகழ்ந்த கியூபா, இன்று அடிப்படை மின்சாரத்திற்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b