Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 14 மே (ஹி.ச.)
கர்நாடகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத அடையாள ஆடைகள் மற்றும் சின்னங்களை அணிந்து வரும் மாணவ-மாணவிகளை கல்வி நிறுவனங்கள் தடுக்க முடியாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து,கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா வெளியிட்ட அறிக்கையில்,
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது கடந்த 2022-ம் ஆண்டு அரசு பள்ளிகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டது.
தற்போது அந்த உத்தரவில் மாற்றம் செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, அதாவது பி.யூ.சி. வரை பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகள் மற்றும் பொருட்களை அணியலாம்.
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பூணூல், கைகளில் கட்டப்படும் புனித கயிறு, ருத்ராட்சை மாலை, தலைப்பாகை உள்ளிட்ட மத அடையாளங்களையும் மாணவர்கள் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் மந்திரி கூறினார்.
அரசியல் சாசன மாண்புகளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கர்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றார்.
மேலும், மத அடையாள ஆடைகளை அணிந்து வரும் மாணவர்களை கல்வி நிறுவனங்கள் தடுக்க முடியாது என்றும், அதேபோல் மத அடையாள ஆடைகளை அணியும்படி யாரையும் வற்புறுத்தவும் முடியாது என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் நுழைவுத்தேர்வின்போது பூணூல் அணிந்து வந்த சில மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் நடைபெற்றது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கான ஆடை கட்டுப்பாடுகளை அந்தந்த தேர்வு ஆணையங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA