Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 மே (ஹி.ச.)
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பணப்பிரச்சனையால் திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், திட்டமிடப்படாத வகையில் வடமாநிலங்களில் உள்ள சில திரையரங்குகளில் ‘கருப்பு’ திரைப்படம் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாத்து விநியோகம் செய்யும் கியூப் நிறுவனம், உரிய முன்னறிவிப்பு இல்லாமல் படத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள கியூப் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள்,
கியூப் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் தவறால் படத்தின் கே.டி.எம். வெளியானதாக தெரிவித்தனர்.
மேலும், வடமாநிலங்களில் படம் வெளியானதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக இணையதளங்களிலும் திரைப்படம் வெளியாகியுள்ளதாக குற்றம்சாட்டினர்.
இதனால் ஏற்பட்ட இழப்புக்கு கியூப் நிறுவனம் தயாரிப்பாளர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், உரிய தீர்வு கிடைக்காவிட்டால் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
‘கருப்பு’ திரைப்பட வெளியீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்று இரவுக்குள் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி திரைப்படம் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ