Enter your Email Address to subscribe to our newsletters

கேரளம், 14 மே (ஹி.ச.)
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102-இல் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக, புதிய முதலமைச்சரை தேர்வுசெய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், புதிய முதலமைச்சர் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதில் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்,
கேரள சட்டப்பேரவை காங்கிரஸ் குழு அளித்த அதிகாரத்தின் அடிப்படையில், அனைத்து ஆலோசனைகளையும் காங்கிரஸ் தலைமை முடித்துள்ளதாகவும், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று முடிவுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் கூட்டம் நடைபெற்ற நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ரமேஷ் சென்னிதாலா இல்லத்திலும், பரவூரில் வி.டி.சதீஷன் இல்லத்திலும் அவர்களது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்தனர்.
இதனிடையே, மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்,என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P