Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களில் சட்ட விதிகளை கடுமையாக அமல்படுத்தும் நோக்கில் டாஸ்மாக் நிர்வாகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று மீண்டும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2003-ஆம் ஆண்டு அமலில் உள்ள விதி எண் 11A-ன் படி, 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்பதால், அனைத்து பணியாளர்களும் இதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களிடம் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை சரிபார்த்த பின்னரே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் பணியாளர்கள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், விதிகளை மீறி 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P