Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 மே (ஹி.ச.)
காவிரி நீர் பகிர்வு மற்றும் அணைகளின் நீர்மட்ட நிலை தொடர்பான முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் வரும் மே 28-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம், காலை 11.30 மணியளவில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹரங்கி அணையில் நீர் தேக்குவது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் அளவு தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதனுடன், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் வானிலை சூழ்நிலை, தென்மேற்கு பருவமழை நிலவரம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள முக்கிய அணைகளின் தற்போதைய நீர்மட்ட விவரங்கள் ஆகியவை தொடர்பாக தரவுகளின் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு விவகாரம் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், இந்த கூட்டம் இரு மாநிலங்களுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P