Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச)
காயத்ரி சாய் அளித்த பாலியல் தொல்லை புகார் வழக்கில், மூத்த பத்திரிகையாளர் டாக்டர் பிரகாஷ் எம். சுவாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
நடிகை காயத்ரி சாயின் கணவரும், ஹாங்காங்கில் தனியார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவருமான சாய்நாத் வெங்கட்ராவின் மர்ம மரணம் குறித்து டாக்டர் பிரகாஷ் சுவாமி புலனாய்வு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு நடிகை காயத்ரி சாய் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
விசாரணையின் போது,
சுவாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் ஜூன் 2018-ல் நடந்ததாக கூறப்பட்டாலும், செப்டம்பரில் தான் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், பின்னர் நவம்பரில் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் வாதிட்டார்.
மேலும், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு போதுமான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும், புகார்தாரரின் சாட்சியத்தில் முரண்பாடுகள் இருப்பதாகவும், சாட்சி முன்கூட்டியே கற்றுக்கொடுக்கப்பட்டது போல் தெரிகிறது என்றும் வாதிடப்பட்டது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், டாக்டர் பிரகாஷ் எம். சுவாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காலதாமதமானவை, நம்பகத்தன்மையற்றவை மற்றும் ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்டு, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
Hindusthan Samachar / P YUVARAJ