நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதுச்சேரியில் லிட்டருக்கு ரூ.3 வரை உயர்வு
புதுச்சேரி, 15 மே (ஹி.ச.) மேற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்களின்
Puducherry


புதுச்சேரி, 15 மே (ஹி.ச.)

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் இந்த விலை உயர்வு, வாகன ஓட்டிகள் மற்றும் வணிகத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று லிட்டருக்கு ரூ.96.26-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், ரூ.2.99 உயர்ந்து இன்று ரூ.99.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ரூ.86.47-க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல், ரூ.2.92 உயர்ந்து இன்று ரூ.89.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, அந்நியச் செலாவணி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், பேருந்து, லாரி, ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. காய்கறி, மளிகை பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் போக்குவரத்து செலவு உயரும் என்பதால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடும்பச் செலவிலும் நேரடியாக உணரப்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரும் தினசரி கூலி தொழிலாளர்களும் இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN