Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
2026 உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து, தலசீமியாவிலிருந்து மீண்ட 30 இளம்பருவத்தினரை ஊக்கமளிக்கும் நிகழ்வைக் கொண்டாடினர்.
அத்துடன், தலசீமியாவுடன் போராடும் குழந்தைகளுக்குத் தேவையான விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைக்கான தங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர்கள் வலியுறுத்தினர்.
தலசீமியா என்பது ஒரு பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும்.
இதில் உடலால் ஆரோக்கியமான ஹீமோகுளோபினை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது.
இது பெரும்பாலும் பல குழந்தைகளுக்குக் கடுமையான இரத்தச்சோகையையும், வாழ்நாள் முழுவதும் இரத்ததானம் பெற வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மேம்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (பிஎம்டி) திட்டங்கள், விழிப்புணர்வு முயற்சிகள், ஆரம்பகால நோய் கண்டறிதல், விரிவான நீண்டகால பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளுக்கான குழந்தை இரத்தவியல் மற்றும் தலசீமியா சிகிச்சையை தீவிரமாக வலுப்படுத்தி வருகின்றன.
இந்தத் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை, கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) நிறுவனத்துடன் இணைந்து, 'தலசீமியா பால் சேவா யோஜனா' (டிபிஎஸ்ஒய்) முன்முயற்சியின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையைப் பெற ஆதரவளித்து வருகிறது.
2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நான்காம் கட்டத்தில் இருக்கும் இத்திட்டம், இந்தியா தழுவிய சிகிச்சை அணுகுமுறையின் மூலம் 'தலசீமியா மேஜர்' மற்றும் 'சிவியர் அப்லாஸ்டிக் அனிமியா' கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் முக்கியச் சுகாதார அணுகல் திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்த நோயை முன்னிறுத்தி, மருத்துவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில்,
தலசீமியா இந்தியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அமைதியாக பாதித்து வருகிறது. இருப்பினும், இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது.
ஆரம்பத்திலேயே பரிசோதனை, சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை கிடைத்தால், பல குழந்தைகளின் வாழ்க்கையை மாற்ற முடியும்.
அப்போலோவில், மருத்துவ சேவை என்பது மருத்துவமனைகளின் எல்லையைத் தாண்டிய ஒரு சமூகப் பொறுப்பு என நாங்கள் நம்புகிறோம்.
மருத்துவ நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் இந்திய நிறுவனங்கள் ஒரே நோக்கத்துடன் இணையும் போது தான் உண்மையான மாற்றம் உருவாகிறது.
உயிர்காக்கும் சிகிச்சைகளை அதிகமானோருக்கு கொண்டு சேர்க்கவும், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை உயர்த்தவும் Coal India Limited வழங்கிய ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க நிறுவனங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கு அவர்களின் உதவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மேலும் பல நிறுவனங்கள் தலசீமியா குறித்த விழிப்புணர்வு, ஆரம்பகட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், ஒவ்வொரு குழந்தைக்கும் சிகிச்சை மட்டுமல்ல, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழும் உரிமையும் கிடைக்க வேண்டும்.
என்று கூறினார்.
இந்த நிகழ்வில் பேசிய தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தை நலவியல் மற்றும் இரத்தவியல் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் ரேவதி ராஜ் பேசுகையில்,
தலசீமியா என்பது குழந்தையை மட்டுமல்ல, முழு குடும்பத்தின் உணர்ச்சியையும், நிதி ரீதியான நல்வாழ்வையும் பாதிக்கிறது.
சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், விழிப்புணர்வு, மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான வாய்ப்புகள் மூலம், குழந்தைகள் ஆரோக்கியமான, நோய் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். இன்று, எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒவ்வொரு தலசீமியா வெற்றியாளரின் துணிச்சலையும் நாங்கள் கொண்டாடுகிறோம் என்று தெரிவித்தார்.
தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தை இரத்தவியல் ஆலோசகர் டாக்டர் ரம்யா கூறியதாவது,
தலசீமியா என்பது வாழ்நாள் முழுவதுமான ஒரு மருத்துவ நிலை மட்டுமல்ல, அது குழந்தைகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு சவாலான பயணமாகும். தாமதமான நோய் கண்டறிதல், குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகியவற்றால், பல குழந்தைகள் இன்றும் வழக்கமான இரத்த மாற்றத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
குழந்தைகள் ஆரோக்கியமான மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை வாழ உதவும் வகையில் விழிப்புணர்வை வலுப்படுத்துவதிலும், சரியான நேரத்தில் தலையீடுகளை மேற்கொள்வதிலும், மேம்பட்ட சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் இது போன்ற முன்முயற்சிகள் முக்கியமானவை என்று தெரிவித்தார்.
தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் பூரி கூறியதாவது,
அப்போலோவில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தலசீமியா கண்டறியப்பட்டு நிர்வகிக்கப்படும் விதத்தில் ஒரு படிப்படியான ஆனால் அர்த்தமுள்ள மாற்றத்தைக் காண்கிறோம்.
அதிகரித்த விழிப்புணர்வு, ஆரம்பகால தலையீடு, மேம்படுத்தப்பட்ட ஸ்கிரீனிங் பரிசோதனைகள், சிறப்பு குழந்தை இரத்தவியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான அணுகல் ஆகியவை, அதிகமான குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இரத்த மாற்றத்தைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த உதவுகின்றன.
இன்று தலசீமியாவிலிருந்து மீண்டவர்கள் அதிக நம்பிக்கையுடனும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துடனும் வாழ்வதைக் காண்பது குடும்பங்களுக்கும் மருத்துவர்களுக்கும் மிகுந்த ஊக்கமளிக்கிறது.
மேலும் இது தொடர்ச்சியான விழிப்புணர்வையும், சரியான நேர சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.
இந்த நிகழ்வில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் ஊக்கமளிக்கும் கலந்துரையாடல்கள், நோயாளிகளின் பயணங்கள் ஆகியவை இடம்பெற்றன.
Hindusthan Samachar / vidya.b