Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 15 மே (ஹி.ச.)
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
சிலருக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் குலதெய்வ கோயிலாகவும் உள்ளது.
அந்தவகையில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை பகுதியை சேர்ந்த ஏழு ஊர் கிராம மக்கள் காலம் காலமாக பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து மேலூரில் தங்கி இருந்து பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி தரிசித்து செல்கின்றனர்.
இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு வருவதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் குளித்தலை தாலுகாவிலிருந்து வடசேரி, புதுப்பட்டி, கல்லுப்பட்டி, சங்காயிபட்டி, கீழவெளியூர் மற்றும் ஏழு ஊரிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி மற்றும் டிராக்டரில் நேற்று 14ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு இன்று (மே 15) காலை 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகே உள்ள மேலூர் சாலையில் உள்ள தோப்பில் தங்கி அன்னதானம் வழங்கி பின்னர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு பெருமாளுக்கு காணிக்கையினை வழங்கி, நம்பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்துவிட்டு பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கி பிறந்த நாளை மறுதினம் தங்களது யாத்திரை நிறைவு செய்துள்ளது மீண்டும் மாட்டு வண்டிகளில் ஊர்களுக்கு செல்வர்.
5 வருடத்திற்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் 7பூசாரிகளைக் கொண்டு, குறிகேட்டுவிட்டு பின்னர் ஊர்பெரியவர்கள் தலைமையில் புறப்பட்டு வந்து வழிபாடு நடத்திச் செல்வதாகவும், தங்களது பாட்டன் முப்பாட்டன் காலம்தொட்டே இவ்வாறு வழிபாடு செய்வதனால் கடவுளின் அனுக்கிரகம் கிடைப்பதோடு, சுபிட்சமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும் அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b