நாய்க்கு வைத்த உணவை சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
திருப்பத்தூர், 16 மே (ஹி.ச) திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதகடுப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். மரம் ஏறும் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழ
Ambur Police Station


திருப்பத்தூர், 16 மே (ஹி.ச)

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதகடுப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். மரம் ஏறும் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சதீஷின் மனைவி ஸ்ரேயா கோழிக்கறி வாங்கி குழம்பு வைத்துள்ளார். தொடர்ந்து, மே 12 ஆம் தேதி மீதமிருந்த அந்த கறிக் குழம்பை நாய்க்கு உண்ண வைத்ததாகத் தெரிகிறது.

அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது 3 வயது குழந்தை பூமிகா மற்றும் ஒரு வயது மகள் ரேணுகா இருவரும், நாய்க்கு வைத்த உணவை எடுத்து உண்டுள்ளனர். அதில் இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வாந்தி எடுத்துள்ளனர்.

அதனைக் கண்டு பயந்து போன சதீஷ் மற்றும் ஸ்ரேயா, குழந்தைகள் இருவரையும் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், பூமிகாவிற்கு உடல்நலக் குறைவு அதிகமானதால், அந்த குழந்தை மட்டும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தை பூமிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர், குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாய்க்கு வைத்த உணவை, தெரியாமல் உண்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN