தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி, 16 மே (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தில் வரவிருக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்த துறைசார்ந
Consultative meeting chaired by the Tirunelveli District Collector


திருநெல்வேலி, 16 மே (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தில் வரவிருக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்த துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் இறுதியில் மழைக்கால பாதிப்புகளைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியர் துறை வாரியாகப் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் பின்வருமாறு:

மழைநீர் தேங்காமல் வழிந்தோடும் முக்கிய வழித்தடங்களைக் கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயகரமான பகுதிகளைக் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.

வெள்ளம் மற்றும் கனமழை காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கான புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரணக் கட்டடங்களைத் தேர்வு செய்து, அவற்றின் தரம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை: வெள்ள பாதிப்புகளைச் சமாளிக்கத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்த வீரர்கள், பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அவசரக்கால பயிற்சிகளை வழங்கித் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

சிறிய மற்றும் பெரிய பாலங்களின் அடியில் மழைநீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யத் தூர்வார வேண்டும். இதைக் கண்காணிக்கப் பாலங்களுக்குத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

நீரேற்று நிலையங்களைத் தொடர் கண்காணிப்பில் வைப்பதோடு, மின்தடை அல்லது வெள்ளக் காலங்களிலும் பொதுமக்களுக்குத் தடையின்றிப் பாதுகாப்பான குடிநீர் வழங்க மாற்றுத் திட்டங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

இடி, மின்னல் மற்றும் பெருவெள்ளக் காலங்களில் சேதமடையும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை (Transformers) உடனடியாக மாற்றி, தடையில்லா மின்சாரம் வழங்கத் தேவையான தளவாடப் பொருட்களைக் கையிருப்பில் வைக்க வேண்டும்.

மழைக்காலங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) பாதிப்படையாமல் இருக்கத் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும். சேரன்மகாதேவி சார் ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி கோட்டாட்சியர் ஆகியோர் விவசாயிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி, கொள்முதல் நிலையங்களைத் தங்களது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், கால்நடைகளுக்குப் பருவமழைக் காலத்தில் பரவும் தொற்றுநோய்களைத் தடுக்கத் தேவையான மருந்துகளைக் கால்நடை பராமரிப்புத் துறை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

மரம் வெட்டும் இயந்திரங்கள், ஜேசிபி வாகனங்கள் மற்றும் பேரிடர் மீட்புப் பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்

என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், திருநெல்வேலி கோட்டாட்சியர் பிரியா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, துணை ஆட்சியர் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா உட்படப் பல்வேறு துறைகளின் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b