Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக என இருபெரும் கட்சியும் தவெகவிடம் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் 73 இடங்களில் வென்றது. திமுக மட்டும் 59 தொகுதிகளில் மட்டுமே வென்று மற்ற இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது.
திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து மாநிலம் முழுவதும் கள ஆய்வு செய்ய திமுக சார்பில் 36 பேர் கொண்ட குழுவை மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த நிலையில், அந்த குழுவோடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் இன்று
(16-05-26) ஆலோசனை மேற்கொண்டார்.
குறிப்பாக தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன என்பதை எவ்வாறு களத்துக்கே சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்? எந்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும்? எப்படி இந்த ஆய்வு இருக்க வேண்டும்? என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அந்த குழுவுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்வி விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது என குழுவுக்கு எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் நாளை மறுதினம் (18-05-26) அந்த 36 பேர் கொண்ட குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யும் சூழலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த குழு வருகிற ஜூன் 5ஆம் தேதிக்குள் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை கொடுக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் திமுக தலைமை பல்வேறு மாற்றங்களை கட்சியில் செய்வதற்கு திட்டம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இன்று தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது,
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b