Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 16 மே (ஹி.ச.)
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்கள், சாம்சன் 20 ரன்கள், உர்வில் படேல் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கார்த்திக் சர்மா அதிரடியாக விளையாடி பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டு 42 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக டேவால்ட் பிரேவிஸ் 25 (16) ரன்களும், ஷிவம் துபே 32 (16) ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் ஆகாஷ் மகராஜ் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஸ் இங்லிஸ் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது.
இந்த ஜோடியில் மிட்செல் மார்ஷ் வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்து சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.
மறுமுனையில் விளையாடிய ஜோஸ் இங்லிஸ் 36 (32) ரன்களில் கேட்ச் ஆனார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
பின்னர் அப்துல் சமத் 7 (3) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் நிகோலஸ் பூரன் 32 (17) ரன்களும், முகுல் சவுத்ரி 13 (10) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முடிவில் லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் எடுத்து, சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியின் சார்பில் முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA