Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 மே (ஹி.ச.)
தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கு உரிய அமர்வு வசதிகள் கட்டாயமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆவணப் பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பதிவுத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக தினமும் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதற்காக, சார் பதிவாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் அமரும் மேஜைகளுக்கு எதிரே போதுமான அளவில் நாற்காலிகள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அலுவலகத்தின் முன்பாகவும் குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களை அமரவைத்தே அதிகாரிகள் பேச வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களை நிற்க வைத்துக்கொண்டு பதிவு அலுவலர்கள் பதிலளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பல அலுவலகங்களில் அது முறையாக பின்பற்றப்படவில்லை என்ற புகார்கள் வந்ததையடுத்து மீண்டும் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து அலுவலகங்களிலும் போதுமான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், சிசிடிவி கேமராக்கள் மூலம் இதை கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணைப் பதிவுத்துறை தலைவர்கள் நேரடி ஆய்வுகள் மேற்கொண்டு நடைமுறையை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ