Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சுற்றுவட்டாரங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தீவிர ஆய்வுகள் மேற்கொள்ள மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றின் வளாகங்களை முறையாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கவும், மதுபானம் கிடைப்பதை சமூக ரீதியாக கட்டுப்படுத்தவும் அரசு கடும் முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் விற்பனையை கண்காணிக்கும் வகையில், அருகிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட போக்குவரத்து மையங்களில் தொடர்ச்சியான சோதனைகள் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் தயாரித்தல், போதைப்பொருட்கள் மற்றும் பிற மயக்கப்பொருட்களை கடத்துதல், சட்டவிரோதமாக சேமித்து வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மது மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதை பழக்கத்திலிருந்து மீள்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் சுகாதாரத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ