Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பு மற்றும் விதிமுறை அமலாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்படும் போது திண்டுக்கல் பூட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன் தனது எக்ஸ் தளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்,இந்தியாவில் முதல் முறையாக இத்தகைய நடைமுறை அமல்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், “டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு மூடும் போது திண்டுக்கல் பூட்டு போட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையால் இரண்டு முக்கிய பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, உலகப் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டுகளின் விற்பனை அதிகரிக்கும் என்பதுடன், டாஸ்மாக் கடைகள் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்ட பிறகும் மறைமுகமாக நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
“ஒரே கல்லில் 2 மாங்காய்” என நகைச்சுவை கலந்த வகையில் அவர் பதிவிட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த நடவடிக்கையை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் பூட்டுகள் தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் அறியப்பட்டவை என்பதால், அவற்றை அரசு பயன்பாட்டில் கொண்டு வருவது உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும் ஊக்கமாக அமையும் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ