போஜ்ஷாலா வளாகம் இனி ‘மா சரஸ்வதி கண்டாபரண்’ என அழைக்கப்படும் - முக்தி யாக்ய ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு
தார், 17 மே (ஹி.ச.) மத்தியப் பிரதேச தார் நகரில் உள்ள போஜ்ஷாலா-கமல் மௌலா வளாகம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா-கமல் மௌலா வளாகம், ராஜா போஜின் போஜ்-பர்மார் வம்ச காலத்தைச் சேர்ந்த வாக்தேவி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலே முதன்மைய
Mukti-Yagya-Coordinator


தார், 17 மே (ஹி.ச.)

மத்தியப் பிரதேச தார் நகரில் உள்ள போஜ்ஷாலா-கமல் மௌலா வளாகம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா-கமல் மௌலா வளாகம், ராஜா போஜின் போஜ்-பர்மார் வம்ச காலத்தைச் சேர்ந்த வாக்தேவி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலே முதன்மையானது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த முஸ்லிம் சமூகத்தை அனுமதித்த முந்தைய தொல்லியல் துறை ஏற்பாட்டையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உயர்நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த வளாகம் இனி ‘மா சரஸ்வதி கண்டாபரண்’ என்று அழைக்கப்படும் என போஜ்ஷாலா முக்தி யாக்ய ஒருங்கிணைப்பாளர் கோபால் சர்மா அறிவித்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சர்மா கூறியதாவது,

1305-ல் அலாவுதீன் கில்ஜி எங்கள் தாயை அவமதித்து இங்கிருந்து வெளியேற்றினார். 720 ஆண்டுகளாக இந்து சமூகம் இதற்காகப் போராடி வருகிறது. எங்கள் தாயைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர். பலர் தங்கள் வாழ்நாளை இந்த கருத்துக்காகவே அர்ப்பணித்துள்ளனர்.

1952-ல் எங்கள் முன்னோர்கள் மகாராஜா போஜ் ஸ்மிருதி வசந்தோத்ஸவ குழுவை அமைத்து, ராஜா போஜின் வாக்தேவி போஜ்ஷாலாவை மீட்கும் விதையை விதைத்தனர்.

இந்தப் போராட்டம் 720 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இன்று உயர்நீதிமன்றம் மூலம் போஜ்ஷாலாவின் களங்கத்தைக் கழுவிவிட்டோம். நேற்று வரை கமல் மௌலா மசூதி என்று அழைக்கப்பட்ட இந்த போஜ்ஷாலா, இனி மா சரஸ்வதி கண்டாபரண் என்று அழைக்கப்படும்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வளாகத்தில் குறியீட்டு சடங்குகளும் வழிபாடுகளும் தொடங்கப்பட்டது.

மேலும், ஆங்கிலேயர்கள் லண்டனுக்கு எடுத்துச் சென்ற சிலையை மீண்டும் போஜ்ஷாலாவில் பிரதிஷ்டை செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்து சமூகம் உற்சாகத்தில் உள்ளது.

இந்து சமூகத்தின் பல ஆண்டு போராட்டம், தவம், தியானம் இன்று ஒரு காற்புள்ளியை எட்டியுள்ளது, முற்றுப்புள்ளி அல்ல. இன்று நாங்கள் அதன் குறியீட்டு உருவப்படத்தை போஜ்ஷாலாவில் வைத்து, உற்சாகத்துடன் பிரதிஷ்டை செய்து, ஹவனும் பூஜையும் நடத்தினோம். ஹவன் நாள் முழுவதும் தொடரும்.

போஜ்ஷாலா ஒரு இந்து கோயில் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. போஜ்ஷாலா இனி இந்து கோயிலாகவே அறியப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து தொழுகைக்கு வேறு இடத்தில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

சிலையை மீண்டும் நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த செயல்முறை தற்போது தொடங்கியுள்ளது. காலப்போக்கில் மூல விக்ரகமும் இங்கு நிறுவப்படும். ஆனால் இன்று நாங்கள் அதன் குறியீட்டு உருவப்படத்தை வைத்து விக்ரக வழிபாடு மற்றும் பிரதிஷ்டையைத் தொடங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக பக்தர்கள் போஜ்ஷாலா வளாகத்தில் திரண்டு வழிபாடு நடத்தினர்.

தார் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரஞ்சன் மீனா மற்றும் காவல் கண்காணிப்பாளர் சச்சின் சர்மா ஆகியோரும் சடங்குகளில் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b