Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 மே (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோவிலில் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சண்முக விலாச மண்டபம் முன்புள்ள கேட்டை தள்ளிவிட்டு உள்ளே சென்றதால் திடீர் நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், பரமக்குடியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும், அலகு வேல் குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த கோவிலுக்கு வந்திருந்தனர்.
பொதுவாக பாதயாத்திரை பக்தர்களுக்கு கோவிலில் தனி வரிசை மூலம் தரிசன வசதி ஏற்படுத்தப்படும். ஆனால் இன்று தனி வரிசை ஏற்பாடு செய்யப்படாததால், பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சண்முக விலாச மண்டபம் முன்பு காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சில பக்தர்கள், மண்டபம் முன்பிருந்த கேட்டை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்றனர்.
இதன் காரணமாக திடீர் நெரிசல் ஏற்பட்டதுடன், கோவில் வளாகத்தில் பரபரப்பும் நிலவியது.
பின்னர் கோவில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam