ஆக்வா, புகையிலை விவசாயிகளுக்காக மத்திய அரசுக்கு சந்திரபாபு கடிதம்
அமராவதி , 18 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் ஆக்வா மற்றும் புகையிலை விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எ
A


அமராவதி , 18 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் ஆக்வா மற்றும் புகையிலை விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி, மத்திய அமைச்சர்களுக்கு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ளார்.

ஆக்வா துறையில் இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் தீவன விலை அதிகரித்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்,

2026 ஜனவரி முதல் மே மாதம் வரை சோயா, மீன் மாவு போன்ற மூலப்பொருட்களின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும், இதனால் தீவன உற்பத்தி செலவு கிலோக்கு ரூ.31-ஐ கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்களின் விலை குறையும் போது அதன் நன்மையை விவசாயிகளுக்கு வழங்காத நிறுவனங்கள், தற்போது அதிக விலையை சுமத்துவது சரியல்ல என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மீன் மாவு ஏற்றுமதிக்கு ஊக்கத் திட்டங்கள் வழங்கவும், சோயா இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தவும் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கோழி வளர்ப்பு துறையைப் போல, மூலப்பொருட்களின் விலையை அடிப்படையாகக் கொண்டு தீவன விலையை மாதந்தோறும் பரிசீலிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கிடையில், எப்.சி.வி. புகையிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் முதல்வர் கவனம் செலுத்தியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களில், சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் உற்பத்தி வரி உயர்வு காரணமாக சந்தை தேவை குறைந்து, விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கிலோக்கு ரூ.280 இருந்த தொடக்க விலை, இந்த ஆண்டு ரூ.250-ஆக குறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 43 ஆயிரம் விவசாயிகள் மற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கடிதங்களில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA