Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 மே (ஹி.ச.)
தமிழகத்தில் அன்றாடம் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடி வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட தொடர்ச்சியான கொலைகள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டுகளில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக அரசு பொறுப்பேற்ற பின்னரும் அதே நிலை நீடிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது அரசின் முதன்மை கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தவெக அரசையும் முதலமைச்சரையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ