Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண், வேலை முடிந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது மர்ம கும்பலால் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், பின்னர் கறம்பக்குடி–ஆலங்குடி சாலையில் தள்ளிவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா வணிகம் குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் காஜா முகைதீன் மீது கஞ்சா கும்பல் தாக்குதல் நடத்தியதையும் அவர் கண்டித்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வணிகம் அதிகரித்ததாக குற்றம்சாட்டிய அன்புமணி, புதிய முதலமைச்சர் விஜய் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பிற்காக எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றும் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P