Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 மே (ஹி.ச.)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரைஅரசு, தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்துள்ளது.
அதே நேரத்தில், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அதிமுகவின் முதுகில் குத்தியுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி அமைப்பது குறித்து பல்வேறு கற்பனை செய்திகள் பரவுவது வழக்கமென குறிப்பிட்ட அவர், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்தோம் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேர அரசியல் நடத்தி, பதவி ஆசை காட்டி, அதிமுக நிர்வாகிகளை பிரிக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நமக்கு வாக்களித்த மக்களையும், கழகத்தின் அடையாளத்தையும் நம்புங்கள். கட்சிக்குள் பிரச்சனைகள் இருந்தால் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் புகழ் இருக்கும் வரை அதிமுக செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும் என்றும் எடப்பாடி கே. பழனிசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ