Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 19 மே (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென தரையிறங்கி காணப்பட்ட அடர்ந்த பனிமூட்டம் சுற்றுலா பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் நாளுக்கு நாள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் கொடைக்கானல் நகரம் முழுவதும் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது.
குறிப்பாக பிரையன்ட் பூங்கா மற்றும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதிகளில் பனிமூட்டம் தரையிறங்கி காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தனர்.
நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்திற்குள் படகு சவாரி செய்து மகிழ்ந்ததுடன், பிரையன்ட் பூங்காவில் மலர்ந்திருந்த வண்ண மலர்களையும் ரசித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
அதே நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
ஒருபுறம் கோடை மழையும் மறுபுறம் அடர்ந்த பனிமூட்டமும் நிலவி வருவதால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam