Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
ஆன்லைன் மருந்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை மாநிலம் முழுவதும் ஒருநாள் மருந்துக் கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு அவசர மருந்து சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அவசர தேவைக்கான மருந்துகள் உடனடியாக கிடைப்பதை உறுதிப்படுத்த உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு மருந்து ஆய்வாளர்கள் தொலைபேசி வசதியுடன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர மருந்து சேவைகள் சீராக கிடைக்கிறதா என்பதை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்தின் உதவி இயக்குநர்கள் தலைமையில் கண்காணித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு அவசர மருந்துகள் தேவைப்பட்டால், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்தின் உதவி இயக்குநர்களை தொடர்புகொண்டு தேவையான சேவைகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், போராட்டத்தில் ஈடுபடும் மருந்து வணிகர் சங்கங்கள், அவசர மருந்து சேவைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அவசர தேவைக்கான மருந்துகள் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட மருந்து ஆய்வாளர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ