Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 02 மே (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்,
எக்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தராஜ் (33) என்பவர் தனது தோட்டத்தை பார்க்க சென்ற நிலையில், நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் குடும்பத்தினரும் அருகில் உள்ளவர்களும் கவலை அடைந்தனர்.
அதே நேரத்தில் பக்கத்து தோட்டத்தில் இருந்த ஒருவர் சத்தம் எழுப்பியதை கேட்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, நந்தராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக மின்சாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தெரியவந்தது என்னவென்றால், நந்தராஜ் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தை சுற்றி, வனவிலங்குகள் பயிர் நிலத்துக்குள் நுழையாமல் இருக்க மின்கம்பி வேலி (பென்சிங்) அமைத்திருந்தார்.
மலைப்பகுதிகளில் யானை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி புகுவதால், இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாக விவசாயிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று இரவு பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த மின் கம்பத்தில் உள்ள மின்கம்பி அறுந்து, நேராக அந்த பென்சிங் கம்பியின் மீது விழுந்துள்ளது.
இது குறித்து தெரியாமல் இன்று காலை தோட்டத்திற்கு சென்ற நந்தராஜ், வழக்கம்போல் வேலியை தாண்ட முயன்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் கடம்பூர் மலைப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை காரணங்களால் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளூர் மக்களிடையே எழுந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN