Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர் , 02 மே (ஹி.ச.)
நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் நாடு முழுவதும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்காக பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்காக ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கோட்டாவில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியை சேர்ந்த டிக்சண்ட் (வயது 20) என்ற மாணவர் கடந்த 2 ஆண்டுகளாக கோட்டாவில் தங்கி இருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இன்று காலை அவர் தங்கி இருந்த விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மாணவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாணவர் டிக்சண்ட் கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், கோட்டாவில் அரங்கேறிய இந்த தற்கொலை சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA