Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 02 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி மாநிலம் முழுவதும் பரபரப்பாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணிகளை அமைத்து போட்டியிட்டன.
மேலும், த.வெ.க.மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்தன.
இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வருகிற 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையொட்டி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தி.மு.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும், ஒரு கருத்துக்கணிப்பில் த.வெ.க. ஆட்சியை அமைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்,
விசிக போட்டியிடாத சில தொகுதிகளில் கட்சியினர் கூட்டணி வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற புகார்கள் வந்துள்ளன.
சில இடங்களில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை.
இதுகுறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எப்படி கணக்கிட்டு பார்த்தாலும் தி.மு.க. கூட்டணிதான் பெரும் வெற்றி பெறும்.
தி.மு.க. அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை நடிகர் விஜய் பிரித்திருக்கிறார்.
ஆனால், தனித்து ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு அவரது கட்சி இன்னும் வலிமை பெறவில்லை.
தி.மு.க.வை அகற்றிவிட்டு பா.ஜ.க. அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் விஜய்க்கு கவலையில்லை.
பா.ஜ.க.வை கொள்கை ரீதியாக எதிர்க்கிறேன் என்பதைத்தவிர, விஜய் வேறு எந்த தெளிவான நிலைப்பாட்டையும் கூறவில்லை என்று அந்த வீடியோவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA