Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 மே (ஹி.ச)
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், எல்.ஏ.எஸ். அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள கட்சி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நாளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்க சில சமூக விரோத சக்திகள் முயற்சி மேற்கொள்ளும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றும் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, மாநிலம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதமேந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மையங்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் பாதுகாப்பு வளையம் அமைத்து பொதுமக்கள் கூடுவதைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஜனநாயக நலன் கருதி, இந்த கோரிக்கையை அவசரமாக பரிசீலிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ