Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 20 மே (ஹி.ச.)
பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த இளம்பை இரா. தமிழ்செல்வனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக 29 மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் பட்டியலில் இணைந்துள்ளார்.
சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகிகள் மீது தலைமை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான தமிழ்செல்வன், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மாணவரணி மாவட்டச் செயலாளராகவும் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய செயலாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b