Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 20 மே (ஹி.ச)
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த வளர்ப்பு யானை சேரன் இன்று காலை உயிரிழந்தது.
சுமார் 40 வயதுடைய சேரன், பல ஆண்டுகளாக முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனத்துறையினருக்கு பரிச்சயமான இந்த யானை முகாமின் முக்கிய யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.
இன்று அதிகாலை சேரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இருப்பினும், தீவிர சிகிச்சை அளித்தும் யானையை காப்பாற்ற முடியாமல் போனது.
சிகிச்சை பலனின்றி சேரன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் முகாம் பணியாளர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
யானை உயிரிழந்ததற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே யானையின் மரணத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வளர்ப்பு யானை சேரனின் உயிரிழப்பு முதுமலை யானைகள் முகாமில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN