Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 20 மே (ஹி.ச.)
சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், சேலம் மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் 41 சிறைவாசிகள் தேர்வு எழுதியிருந்தனர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதால் 100 சதவீதத் தேர்ச்சி பதிவாகியுள்ளது.
சிறைவாசிகளில் ஆயுள் தண்டனை கைதியான ராஜ்குமார் 324 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கவியரசு 316 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். சிவகுமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் தலா 311 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சிறைவாசிகள் கல்வி மூலம் தங்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிறைத்துறை பல்வேறு கல்வி மற்றும் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகள் பள்ளி மற்றும் உயர்கல்வி தேர்வுகளை தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
இந்த ஆண்டு சேலம் மத்திய சிறைச்சாலையில் அனைத்து தேர்வர்களும் வெற்றி பெற்றிருப்பது சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியின் மூலம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN