Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச)
திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் (19), கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.
இடது மார்பு, கழுத்து மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
படுகாயமடைந்த அஜய் முதலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐஸ் ஹவுஸ் போலீசார், திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (20), தவக்களை ராஜ்குமார் (23), கார்த்தி (19), பூண்டு முகேஷ் (19), காமேஸ்வரன் (28) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜய் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 17ஆம் தேதி இரவு மெரினா கடற்கரையில் அஜய் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது செல்போனை தனுஷ் மற்றும் தவக்களை ராஜ்குமார் திருடிச் சென்றதாக தெரியவந்தது.
பின்னர், இதை அறிந்த அஜய் அவர்களது வீட்டுக்கு சென்று தனது செல்போனை கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து அஜயை கொலைவெறி தாக்குதல் நடத்தியது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய ஐஸ் ஹவுஸ் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ