Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
சென்னை தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரைச் சேர்ந்த ரகு (42), திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் கடந்த ஓராண்டாக ஆட்டோ மூலம் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இன்று மதியம் பாரிமுனையில் உள்ள உணவகங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து விட்டு, பழைய என்ஆர்டி மேம்பாலம் வழியாக தண்டையார்பேட்டை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எம்.எஸ். தெரு சந்திப்பு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த மற்றொரு ஆட்டோ மீது ரகு ஓட்டி வந்த ஆட்டோ மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (32), ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து ரகுவிடம் தகராறு செய்துள்ளார்.
பின்னர் அவரை சரமாரியாக கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ரகுவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயபுரம் போலீசார், ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ