ஐந்தாண்டுகளுக்கும் மேலான தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா ? - டிடிவி தினகரன் கேள்வி
சென்னை, 21 மே (ஹி.ச.) அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் தலைமைக் காவலர் கோதண்டபாணி மகளுக்கு கால் பாதம் பறிபோனதாகக் கூறப்படும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
ஐந்தாண்டுகளுக்கும் மேலான தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா ? - டிடிவி தினகரன் கேள்வி


சென்னை, 21 மே (ஹி.ச.)

அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் தலைமைக் காவலர் கோதண்டபாணி மகளுக்கு கால் பாதம் பறிபோனதாகக் கூறப்படும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் மகளின் கால் பாதம் பறிபோனதாகப் போராடும் தலைமைக் காவலர் - ஐந்தாண்டுகளுக்கும் மேலான தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா ?

அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைச் செயலக நுழைவுவாயிலில் போராட்டம் நடத்திய காவல்துறையைச் சார்ந்த தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்கள் சக காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது மகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்களைக் கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தலைமைக் காவலர் திரு.கோதண்டபாணி அவர்களின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கால் பாதத்தை இழந்த அவரின் மகளுக்கு மேல் சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b