Enter your Email Address to subscribe to our newsletters

நாகர்கோவில், 22 மே (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் குத்தி, காதுடன் அறுத்து தங்க நகை பறித்துச் சென்ற சம்பவத்தில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே வடக்குக்கோணம் பகுதியைச் சேர்ந்த வசந்தா (70) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார்.
ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் அமைந்திருந்த அவரது வீட்டுக்கு கடந்த 14-ஆம் தேதி மாலை மர்ம நபர்கள் சென்றுள்ளனர்.
குடிக்க தண்ணீர் கேட்பது போல நடித்து, வசந்தா தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மூதாட்டியின் காதை கிழித்து சுமார் 3.5 கிராம் எடையுள்ள தங்க கம்மலை பறித்துக்கொண்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
பலத்த காயமடைந்த வசந்தா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மூதாட்டி உயிரிழந்தது அப்பகுதியில் மேலும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P